Saturday, August 14, 2010

விழித்திருங்கள் மக்களே!

என்னவள் ஆப்பிள் வேண்டும் என்றாள். சரி போனா போகுது என்று ஒரு கடைக்குள் சென்றோம். கடை நல்லா பளபளன்னு மின்னிச்சு. பெங்களூர்ல இந்த மாதிரி கடைகளுக்கு பஞ்சமே இல்ல. அத வாங்கினா இது இலவசம், இத வாங்கினா அது இலவசம்ன்னு பெரிய பெரிய விளம்பரங்கள் வேற. ஏதோ ஒரு வகை ஆப்பிள் கிலோ Rs.99/- எழுதி வைத்திருந்தார்கள். அது தான் வேண்டும் என்று நான் சொல்ல, என்னவள் அந்த வகை ஆப்பிள் தனக்கு பிடிக்காது என்று, வேறு வகையை எடுத்தாள். நான் விடுவேணா!! எனக்கு அது தான் வேணும் என்று அடம்பிடித்து, அதில் ஒரு 400g எனக்காக எடுத்துட்டு வந்தேன்.

வேறு சில பொருள்களையும் எடுத்துட்டு பில் போட்டு வாங்கி வந்தேன். என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு பில்லை சரி பார்த்தேன். அட ராமா நான் விரும்பி எடுத்த ஆப்பிலை கிலோ Rs.109/- ன்னு போட்டிருந்தது.

அடேங்கப்பா, எப்படி எல்லாம் ஏமாத்துகிறார்கள். தெரியாமல் நடந்த genuine mistake -ஆ இருக்கலாம். இருந்தாலும் ஏமாறரது யாரு? அடிச்சுட்டாண்டா அம்பி! நான் விடுவேணா, போனேன் பில் கவுண்ட்டருக்கு,... நீட்டினேன் பில்லை.... அந்த கவுண்ட்டரில் இருந்த தம்பி அவருடைய மேலதிகாரியை கூப்பிட்டார். அவர் உடனேயே ஆப்பிள் இருந்த இடத்திற்கு போயி பார்த்து விட்டு, ஒரு 15 நிமிஷம் நோட்டம் விட்டார். விலை எழுதியிருந்தது ஒரு ஸ்லேட்டில். நான் கூட அதை மாற்றி எழுத போகிறார் என்று நினைத்து, நல்ல சண்டை போடலாமென்று சட்டையை எல்லாம் மடித்து நின்னிட்டிருந்தேன்.

அவர் என்னிடம் வந்து, நீங்க சொன்னது சரி தானுங்கண்ணா. இந்தாங்க மீதி நாலு ரூபாய் என்றார். புஸ்ஸுண்ணு போச்சு! என்னவோ சண்டை ஏதும் இல்லாமல் வீட்டிற்கு வந்தது என்னவளுக்கென்னவோ சந்தோஷம் தான்!

ஆகவே மக்களே, விழித்திருங்கள்! இதை எல்லாம் விட, நான் நாலு ரூபாய்க்காக ஒரு 30 நிமிஷம் காத்திருந்தது அங்கே வந்த மற்ற மக்களுக்கு ஒரே வேடிக்கையாக இருந்தது. சிலர் சிரித்தார்கள். ஆனால், நான் சென்ற பிறகு அவர்களும் பில்களை சரிபார்த்திருப்பார்கள் என்று எனக்கு தெரியும். இது சும்மா நாலு ரூபா தான், ஆனால்.... சரி சரி நான் என்ன கருத்து சொல்ல வர்ரென்னு உங்களுக்கு புரிஞ்சுருச்சுன்னு தெரியுது.

ஓ! அது என்ன கடைன்னு கேக்கறீங்களா? அது.. அது.. "நிறையா". கண்டுபிடி, கண்டுபிடி, கடைய கண்டுபிடி.. :)

Friday, August 13, 2010

என்னை பற்றி கொஞ்சம்..

அடிச்சு சொல்லுவேன், கல்கியே என் தமிழ் இலக்கிய ஆர்வத்தை தூண்டியவர் என்று.

பள்ளியில் படிக்கும்போது தமிழாசிரியர் ஏதோ பேசிட்டிருப்பார், நான் ஏதாவது நினைத்துக்கொண்டு இருப்பேன், சில சமையம் விட்டத்தையும் பார்பதுண்டு. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது, என் தமிழாசிரியரின் கடிதம் - என் குடும்பத்திற்கு. அவர் ஏதோ எனக்கு பெரிய திறமை இருக்குதுன்னு நினைச்சுட்டு, அதுக்கு என் எழுத்தும் நல்லா இருக்க வேண்டும் என்று ஆசைபட்டு, என் கையெழுத்தை செப்பனிட பயிற்சி அது இதுண்ணு ஒரு பெரிய கடிதம் எழுதினார். எனக்கே சிரிப்பாய் வந்தது, என் அக்கா அதை படித்தபோது. அவளுக்கும் ஆச்சர்யம் தான். இருக்காதா பின்னே!!!

ஆனாலும், தமிழ் பாடத்தில் வரும் செய்யுள்கள், காப்பியங்கள், திருக்குறள் என்று எனக்கு அனைத்தும் பிடிக்கும். நன்றாக மனப்பாடம் செய்து, அப்படியே பரிட்சையில் கொட்டுவேன். இப்போது நினைத்தால் அவை யாவற்றையும் நன்றாக படித்துருக்க கூடாதா என்று ஒரு ஏக்கம்.

பிறகு எங்கிருந்து அய்யா வந்தது இந்த தமிழ் ஆர்வம். முதலில் என் பெரிய அக்காவின் கணவர். அவருக்கு நிறைய நண்பர்கள் - அவர்களில் சிலர் நல்லா இலக்கிய திறமை மிக்கவர்கள். அடிக்கடி அவர்களை பற்றியும், சில பாடல்களை பற்றியும் பேசுவார். என்னடா இருக்கிறது இந்த தமிழில் என்று என்னை அது சிந்திக்க வைத்தது. ஆனால் அதிகம் படிக்க சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம், என் படிப்பு - கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்.

கல்லூரியில் தமிழே கிடையாது, பாடமாக. தமிழ் படித்தது சினிமா பாடல்களில் மூலமாத்தான். நட்பு வட்டமும் எனக்கு தமிழ் இலக்கியம் பற்றி படிக்க வாப்பில்லாமல் பண்ணிவிட்டது. பின்பு பெங்களூர் வாழ்க்கை தொடங்கியது. கேட்கவா வேண்டும், புது இடம், புது சம்பளம் - வாழ்க்கையை படிக்கவே நேரம் போனது. பெரிசா ஒண்ணு பண்ணல.

இந்த மென்பொருள் துறையில் இருப்பவர்களுக்கேயான ஒரு வரம் எனக்கும் கிடைத்தது. அது நேரம். சும்மா இருக்க சம்பளம் கொடுப்பார்கள். என்ன செய்வதேன்றே தெரியாது. சும்மா ஆபீஸ் போக வேண்டியது, ID கார்டை swipe பண்ண வேண்டியது, சாப்பிட வேண்டியது என்று போனது. அந்த வரத்திலும் பெரிய வரம், இன்டெர்நெட்! தேடும் அனைத்தும் கிடைக்கும் சொர்க்கம். ஏதோ ஒரு தேடலின் போது அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" பற்றி படிக்க நேர்ந்தது. அதுவே என் ஆரம்பம்.

அதுவே, என் இலக்கிய ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்தது. பிறகு "பொன்னியின் செல்வன்" யாஹூ குரூப்-ல் இணைந்தது இன்னொரு பெரிய நிகழ்வு. பெரிய மனிதர்கள் இருக்கும் குழு, எண்ணென்னவோ பேசுவார்கள். அவ்வப்போது இந்த குழுவில் இருக்க எனக்கென்ன தகுதி இருக்குதென்று நினைத்ததுன்று.

ஆகவே, அடிச்சு சொல்லுவேன், கல்கியே என் தமிழ் இலக்கிய ஆர்வத்தை தூண்டியவர் என்று. அட ராமா சொல்லவந்தத மறந்துட்டேனே! புலிய புடிக்க போயி எலியா திரும்பி வந்தானாம் - அந்த கதையால போச்சு.

ஆதாகப்பட்டது எனக்கு வந்த தமிழ் ஆர்வம் என் மனைவிக்கும் வரட்டுமேண்ணு "பொன்னியின் செல்வன்" வாங்கித் தந்துள்ளேன். எதையும் திணிக்க எனக்கு உரிமையில்லை, பார்ப்போம்!

Image(151)

பி.கு :  தெரியுது சிலர் செருப்பை என் மேல வீச தயாரா இருக்கீங்கண்ணு.. யார் யாரோ என்ன என்னவோ எழுதுகிறார்கள், இவன் என்னடாண்ணா சும்மா இவன் கதை சொல்லராண்ணு.. இவன் பக்கமே இனி வார கூடாதுண்ணு நீங்க நினைக்கறது எனக்கு கேட்குது... ஹீஹீஹீ...மன்னிக்கவும், நான் ஏர்க்கானவே சொன்ன மாதிரி எனக்கு தமிழில் பெரிய எழுத்து திறமை ஏதும் கிடையாது. இப்போ தான் ஒண்ணாப்பு சேர்ந்த மாதிரி இருக்கு. +12 போன சொல்லி அனுப்புறேன், அப்போ திரும்ப வாங்க. நன்றி!

Tuesday, August 10, 2010

சமைக்கலாம் வாங்க

என் மனைவி ஒரு புதிய வலைப்பூ தொடங்கியுள்ளார். சமைக்கலாம் வாங்க! இந்த இண்டெர்நெட்டிக்கு அவர் புதிய வரவு. வீட்டில் சும்மா இருக்கும் போது அதில் எழுதுவேன் என்றிருக்கிறார், பொருத்திருந்து பார்ப்போம்.

வலைப்பூ : சமைக்கலாம் வாங்க!